ஒரு திரைப்படம் அத்தனை விதங்களிலும் ஆஹா ஓஹோ, ஏ.1 ஆக இருந்துவிட முடிவது எப்போதோ ஒருதரம் நிகழ்வு.
ஒரு படத்தில் ஒரு நடிகர் / நடிகையின் நடிப்பு அவரது மாஸ்டர் பீசாக இருக்கலாம். இன்னொரு படத்தில் இசை ஊரைப் புரட்டிப் போட்ட இசையாக இருக்கலாம். இன்னொரு படம் இயக்குனரின் பன்ச்சாக, இன்னொன்று திரைக்கதைக்கு இலக்கணம் சொல்வதாக, மற்றொன்று வசனத்திற்குப் பெயர் வாங்கினதாக என்று ஒவ்வொரு படத்திற்கு ஒவ்வொரு சிறப்பு இருக்கலாம். ஒரு சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறப்பம்சங்கள் அமைந்து இருக்கலாம்.
தமிழில் இப்படிப்பட்ட ஆல்-ரவுண்டு சினிமாக்கள் என்று சொல்ல ஆரம்பித்தால் சட்டென என் நினைவுக்கு வரும் படங்கள் இவை:
தில்லானா மோகனாம்பாள்
நெஞ்சில் ஓர் ஆலயம்
காதலிக்க நேரமில்லை
நாயகன்
இந்த லிஸ்டில் குறிப்பிட வேண்டிய ஒரு முக்கியத் திரைப்படம், தமிழ்த் திரையின் தன்னிகரற்றதொரு மாஸ்டர் பீஸ் "மைக்கேல் மதன காமராஜன்". தமிழ்த் திரையுலகின் ஒரு மைல்-ஸ்டோன் இந்தப் படம். Never before, never after என்று தமிழில் ஒரு படம் பற்றி குறிப்பிட வேண்டுமென்றால் அப்படியான ஒரேயொரு படம் தமிழில் இதுவே,
இரு வேடங்கள், மூன்று வேடங்கள் சகஜமான காலகட்டமான எண்பதுகளின் இறுதியில் கமலுக்கு உதித்த ஐடியாவான "நான்கு வேடங்களில் கமல்" - இதுதான் படத்தின் ஹைலைட் (இது தெரியாதா எங்களுக்கு? - ஓகே ஓகே). ஆனால் அது மட்டுமே படத்தின் ஒன் அண்ட் ஒன்லி பாய்ண்ட்டாக அமைந்திருந்தால் படம் பெரிய பெயர் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. கமல், இளையராஜா, நாகேஷ், டில்லி கணேஷ், மனோரமா - இவர்களுக்கெல்லாம் மேலே ஊர்வசியும், க்ரேஸி மோகனின் வசனமும், இன்னமும் இன்னமும் என படத்தைக் குறித்து பேசிக் கொண்டே போகலாம்.
அதுசரி இப்போ என்ன மைக்கேல் மதன காமராஜன் பற்றின பேச்சு?
பேசவேண்டிய தேவை இருக்கே....! சரியாக 24 வருடம் முன் இதே போன்றதொரு தீபாவளித் திருநாளில் மைக்கேல் மதன காமராஜன் ரிலீஸானது.
யெஸ்! அக்டோபர் 17, 1990 - தீபாவளி நாளில் ரிலீசான மைக்கேல் மதன காமராஜனுக்கு இது இருபத்தி ஐந்தாவது சிறப்பு வருடம்.
ஸோ வாட்?
ஸோ வாட் இருக்கிறதே. இனி வாராவாரம் இந்தப் படம் பற்றி பேசுவோம் - அடுத்த தீபாவளி வரைக்கும்.....!
ரை ரைட்!
(மீண்டும் சந்திப்போம்)